SLC முன்னாள் தலைவர்கள் அமைச்சருக்கு கடிதம்

இலங்கை கிரிக்கெட் நிறுவன முன்னாள் தலைவர்கள் எழுவர் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு கடிதம்

by Staff Writer 29-06-2018 | 8:47 PM
Colombo (News 1st)  இலங்கை கிரிக்கெட் யாப்பை மாற்றுவது உள்ளிட்ட பல விடயங்களை வலியுறுத்தி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்கள் 7 பேர் கையொப்பமிட்ட கடிதமொன்று விளையாட்டுத்துறை அமைச்சரிடம் இன்று கையளிக்கப்பட்டது. இலங்கை கிரிக்கெட் அணி தரவரிசையில் வீழ்ச்சியடைந்தமை மற்றும் சுமார் 40 வீரர்களும் 6 அணித்தலைவர்களும் அடுத்தடுத்து மாற்றப்பட்டமை குறித்தும் இந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் நிர்வாகத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பான தகவல்களும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. நிதியை மட்டும் குறிக்கோளாகக்கொண்டு கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நிர்வாகத்தால் கிரிக்கெட் விளையாட்டை விருத்தி செய்ய முடியாது போனது என கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் சுமத்தப்பட்ட ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு தொடர்பான விடயங்களும் அவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்படுவதற்கான காரணங்களும் குறித்த கடிதத்தின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. முன்னாள் கிரிக்கெட் நிறுவனத் தலைவர்களான ஆனா புஞ்சிஹேவா, விஜய மலலசேகர, ரியென்சி விஜேதிலக, சிதத் வெத்தமுனி, அர்ஜூன ரணதுங்க, ஜயந்த தர்மதாஸ, உபாலி தர்மதாஸ ஆகிய 7 பேரே குறித்த கடித்தில் கையொப்பமிட்டுள்ளனர்.