உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு மாற்றம்: CBSL அறிக்கை

மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு மாற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது: மத்திய வங்கி

by Staff Writer 28-06-2018 | 8:52 PM
Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கியினால் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு மாற்றப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2007 ஆம் ஆண்டில் இருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியை மதிப்பீடு செய்யும் பூரண பொறுப்பு புள்ளிவிபரவியல் மற்றும் தொகை மதிப்பு திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இலங்கை மத்திய வங்கியினால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பீடு மாற்றப்பட்டுள்ளதாக மக்களை திசை திருப்பும் வகையில் சில தரப்பினர் ஊடங்களுக்கு அறிக்கை விடுத்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 2006 ஆம் ஆண்டு வரை புள்ளிவிபரவியல் மற்றும் தொகை மதிப்பு திணைக்களத்தினால் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு செய்யப்பட்டு வௌியிடப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், சுயாதீன நிறுவனம் ஒன்றினால் தரவுகளை தொகுக்கும் முக்கியத்துவத்தினை கருத்திற்கொண்டு 2007 ஆம் ஆண்டில் இருந்து அதன் பூரண பொறுப்பு புள்ளிவிபரவியல் மற்றும் தொகை மதிப்பு திணைக்களத்திற்கு வழங்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் அறிக்கையினை ஆராயும் போது, புள்ளிவிபரவியல் மற்றும் தொகை மதிப்பு திணைக்களத்தின் தரவுகள் தொடர்பில் பிரச்சினை எழுகின்றது. சர்வதேச முறைப்படியே இங்கு தரவுகள் தொகுக்கப்படுவதாக இந்தத் திணைக்களம் கூறுவதற்கும் இடமுள்ளது. குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் போது அதிலிருந்து விலகிச்செல்லாமல் நியாயப்பூர்வமான விளக்கத்தை வழங்க வேண்டும் அல்லவா? இதேவேளை, மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சுமத்திய குற்றச்சாட்டினை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி அறிக்கை ஒன்றை விடுத்து தௌிவுபடுத்தியுள்ளார். சிரேஷ்ட பொருளாதார நிபுணரான கலாநிதி வீரசிங்க தாம் ​சேவையாற்றிய இரண்டு வருட காலத்தில் வங்கி செயற்பாடுகளில் பாரிய பங்களிப்பு வழங்கிய அதிகாரி என கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.