80 வருடங்களில் முதல்சுற்றுடன் வெளியேறிய ஜேர்மனி

உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட வரலாற்றில் 80 வருடங்களின் பின் முதல் சுற்றுடன் வௌியேறிய ஜேர்மனி

by Staff Writer 28-06-2018 | 7:38 AM
உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட வரலாற்றில் 80 வருடங்களின் பின்னர் ஜேர்மனி முதல் சுற்றுடன் வெளியேற்றப்பட்டுள்ளது. நடப்பு உலக சம்பியனான ஜேர்மனி இந்த முறை லீக் சுற்றில் தனது கடைசிப் போட்டியில் தென் கொரியாவிடம் அதிர்ச்சி தோல்வியையும் சந்தித்தது. உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் எவ் குழுவுக்கான தமது கடைசிப் போட்டியில் ஜேர்மனி மற்றும் தென் கொரிய அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்கு தகுதி பெறமுடியும் என்ற கட்டாயத்தில் ஜேர்மனி களமிறங்கியது. எனினும், எதிர்பார்த்தது போல் தென் கொரியாவுடனான போட்டி அவ்வளவு இலகுவாக அமையவில்லை. தென் கொரியாவின் ஆக்ரோஷமான ஆட்டத்துக்கு மத்தியில் ஜேர்மனியால் கோலடிக்க முடியாது போக 2 பாதி ஆட்டங்களும் கோலின்றி முடிந்தன. இந்நிலையில், வழங்கப்பட்ட உபாதைக்கான மேலதிக நேரத்தில் 2 கோல்களைப் போட்டு தென் கொரியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ஈட்டியது. இது 1938 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜேர்மனி லீக் சுற்றுடன் வெளியேற்ற்றப்பட்ட முதல் சந்தர்ப்பமாகும். ஜேர்மனி 1954, 1974, 1990, 2014 ஆம் ஆண்டு ஆகிய 4 தடவைகள் உலக சம்பியானான அணியாகும். இதேவேளை, எவ் குழுவுக்கான மற்றைய போட்டியில் மெக்ஸிகோ மற்றும் சுவீடன் அணிகள் மோதின. போட்டியில் முதல் பாதியில் 2 அணிகளாலும் கோலடிக்க முடியவில்லை. 2ஆம் பாதியில் 50ஆவது நிமிடத்தில் சுவீடன் முதல் கோலைப் போட்டது. தொடர்ந்து 62ஆவது நிமிடத்தில் தனது 2ஆவது கோலையும் எட்டிய சுவீடன் வெற்றிக்கு அடித்தளமிட்டது. 74ஆவது நிமிடத்தில் மெக்ஸிகோ வீரர் இழைத்த தவறால் சுவீடனுக்கு மூன்றாவது கோலும் கிட்டியது. இறுதியில் 3 - 0 எனும் கோல் கணக்கில் சுவீடன் வெற்றி பெற்றது. இதற்கமைய எவ் குழுவிலிருந்து மெக்ஸிகோ மற்றும் சுவீடன் அணிகள் 2ஆம் சுற்றுக்குத் தகுதிபெற்றன.