தேங்கிய கடிதங்களைப் பகிரும் நடவடிக்கை ஆரம்பம்

தபால் ஊழியர்களின் பகிஷ்கரிப்பினால் தேங்கிய கடிதங்களைப் பகிரும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

by Staff Writer 27-06-2018 | 6:34 AM
Colombo (News 1st) தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக குவிந்துள்ள கடிதங்களைப் பகிரும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்தது. கடந்த 16 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகம் மற்றும் தபால் நிலையங்களில் 15 இலட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் குவிந்துள்ளதாக தபால் தொழிற்சங்கத்தின் ஒன்றிணைந்த ஏற்பாட்டாளர் ஷிந்தக பண்டார தெரிவித்தார். இதற்கு ​மேலதிகமாக வௌிநாட்டு தபால் சேவையூடாக கொண்டுவரப்பட்ட 1,000க்கும் அதிகமான பொதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தபால் அமைச்சர் மற்றும் தபால்துறை அதிகாரிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாடுகளின் அடிப்படையில் நேற்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையைத் தற்காலிகமாகக் கைவிட தபால் தொழிற்சங்கம் தீர்மானித்தது. எவ்வாறாயினும், ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்ளும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி, தபால் தொழிற்சங்கத்தினர் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஷிந்தக பண்டார தெரிவித்தார். இந்நிலையில், தபால் தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்புக்கு வழிவகுத்த காரணம் தொடர்பில் அறிவதற்காக தபால் சேவைகள் அமைச்சு, அமைச்சின் செயலாளர் மற்றும் தபால்மா அதிபரை தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.