16ஆவது நாளாக தொடரும் தபால்ஊழியர்களின் பகிஷ்கரிப்பு

16ஆவது நாளாகவும் தொடரும் தபால் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு

by Staff Writer 26-06-2018 | 8:53 AM
Colombo (News 1st) தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் வெற்றியளிக்கவில்லை என்பதால் 16ஆவது நாளாகவும் தமது தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதாக தபால் தொழிற்சங்க ஒன்றிணைந்த ஒன்றியம் தெரிவித்தது. தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு தபால்கள் தேங்கியுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் அப்துல் ஹலீம் , தேங்கியுள்ள கடிதங்களை விநியோகிப்பதற்கு விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். நாளைய தினத்திற்குள் ஊழியர்களின் கோரிக்கைக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, தமது கோரிக்கைக்குத் தீர்வு பெற்றுகொடுக்கும் வரை பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஊழியர்கள் மீண்டும் சேவைக்குத் திரும்பும் வரை எவ்வித பேச்சுவார்த்தைகளுக்கும் தயாரில்லை என தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன நியூஸ்ஃபெஸ்ட்டுக்குத் தெரிவித்தார். தூரத்திலுள்ள ஊழியர்கள் அருகிலிருக்கும் தபால் அதிகாரி காரியாலயத்துக்கு சேவைக்குத் திரும்புமாறும் அழைக்கப்பட்டுள்ளனர்.