புகலிடம் கோருவோர் மீதான நடவடிக்கை இடைநிறுத்தம்

பிள்ளைகளுடன் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்கள் மீதான சட்டநடவடிக்கை தற்காலிகமாக நிறுத்திவைப்பு

by Staff Writer 26-06-2018 | 9:04 AM
அமெரிக்காவிற்குள் பிள்ளைகளுடன் குடியேறும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீதான சட்ட நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாக அமெரிக்க எல்லை முகவர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுக்குள் பிள்ளைகளுடன் வருபவர்களைக் கைது செய்து குடியுரிமை சட்டத்தை மீறியதாகத் தெரிவித்து பிள்ளைகள் மீது குற்றவியல் வழக்கு பதிவுசெய்வதற்கு சட்டத்தில் இடமில்லை என்பதால் பெற்றோரிடமிருந்து குழந்தைகளைப் பிரித்து எல்லையோரங்களில் உள்ள பிரத்தியேக காப்பகங்களில் வைக்கப்படுகின்ற சூழல் அமெரிக்காவில் உருவாகியுள்ளது. இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதியிலிருந்து மே மாதம் 31 ஆம் திகதிவரை எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவிற்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் 1,940 பேர் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். அவர்களுடன் வந்த சிறுவர், சிறுமியர்கள் 2,300 பேர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு காப்பகங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறும் புகலிடக் கோரிக்கையாளர்களுடன் அவர்களின் பிள்ளைகளை சேர்த்துவைப்பது தொடர்பிலான உடன்படிக்கையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் கையெழுத்திட்டார். இந்நிலையில், அவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாக அமெரிக்க எல்லை முகவர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.