சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை

சுழிபுரம் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை: பிரேதப்பரிசோதனையில் தெரியவந்துள்ளது

by Bella Dalima 26-06-2018 | 9:21 PM
Colombo (News 1st)  யாழ்ப்பாணம் - சுழிபுரம், காட்டுப்புலம் பகுதியில் நேற்று (25) சடலமாக மீட்கப்பட்ட 6 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை பிரேதப்பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி உ.மயூரதன் தெரிவித்தார். நீரில் மூழ்கியதால் மரணம் சம்பவிக்கவில்லையென அவர் குறிப்பிட்டார். இதேவேளை, சிறுமியை கொலை செய்து சடலத்தை கிணற்றில் எறிந்த சந்தேகநபரைக் கைது செய்வதற்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் தொடர்பில் சில தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சுழிபுரம் - காட்டுப்புலம் பகுதியிலுள்ள கிணறு ஒன்றினுள் இருந்து 6 வயதான சிறுமி சிவனேஸ்வரன் ரெஜினா நேற்று சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் சடலம் சுழிபுரம் திருவடிநிலை இந்து மயானத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், சம்பவ இடத்தில் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் தடயப்பொருட்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதேவேளை, காடுகள் சூழ்ந்துள்ள குறித்த பகுதியில் சுமார் 6 வருடங்களுக்கு முன்னரும் இதேபோன்றதொரு சம்பவம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மேலும், காட்டுப்புலத்திலிருந்து பேரணியாகச் சென்ற மக்கள், மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரொன்றையும் கையளித்தனர்.