கிளி.சிறுத்தை சித்திரவதை - இதுவரை ஐவர் கைது!

சிறுத்தை சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் இதுவரை ஐவர் கைது!

by Staff Writer 24-06-2018 | 5:30 PM
கிளிநொச்சி அம்பாள்குளத்தில் சிறுத்தை சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டமை தொடர்பில் இதுவரை ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி உதயபுரம் பகுதியில் வைத்து இன்று மாலை மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி அம்பாள்குத்தில் சிறுத்தையை சித்திரவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்நேகபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சந்தேநகபர்கள் இருவரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி பதில் நீதவான் மயில்வாகனம் கிரேசியன் உத்தரவிட்டார். அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேநகபர்களையும் கைது செய்யுமாறு பதில் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். மேலும் பல சந்தேகநபர்களை கைது செய்ய வேண்டியுள்ளதால் சந்தேநகபர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை நிராகரிக்கப்பட்டது. சிறுத்தையை சித்திவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நேற்றிரவு சந்தேநகபரொருவர் கைதானதுடன், இன்று காலை மற்றுமொருவர் சரணடைந்தார். இரண்டு சந்தேகநபர்களும் 39 மற்றும் 42 வயதுகளையுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஐந்து கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுத்தை அடித்துக்கொல்லப்பட்டமை தொடர்பிலான புகைப்படங்கள் கிளிநொச்சி நீதிமன்றமூடாக பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்கமைய, சந்தேநகபர்களை கைது செய்வதற்காக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சிறுத்தை கொல்லப்பட்டமையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை பலரை காயப்படுத்தியது. காயமடைந்தவர்களில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் அடங்குகின்றனர். பின்னர் சிறுத்தை அடித்துக்கொல்லப்பட்டது. இதேவேளை, சிறுத்தை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.