பாதாளக் குழு உறுப்பினர்கள் 46 பேர் கைது

இந்த வருடத்தில் பாதாளக் குழு உறுப்பினர்கள் 46 பேர் கைது

by Staff Writer 24-06-2018 | 1:15 PM
Colombo (News 1st) இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 36 குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதாளக் குழு உறுப்பினர்கள் 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 32 பேர் மேல் மாகாணத்திலும் 14 பேர் தென் பகுதியிலும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து 6 கைக்குண்டுகள், பல்வேறு வகையிலான 23 துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, மாத்தறையில் கொள்ளையர்களுடன் நடந்த பரஸ்பர துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பலியாகிய பொலிஸ் கான்ஸ்டபளின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ளன. பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதன்பின்னர், மாத்தறை பொது மயானத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளன. நகரின் வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் பூதவுடலுக்கு ஹெலிகொப்டர் மூலம் மலர் தூவுவதற்கும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, பொலிஸ் மரியாதையுடன் இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளன. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான சாமர இந்திரஜித், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நேற்று பலியாகியமை குறிப்பிடத்தக்கது.