சிறுத்தை கொலை: விசாரணைக்கு பொலிஸ்குழுக்கள் நியமனம்

சிறுத்தை அடித்துக்கொலை: தொடர்புடையவர்களை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் நியமனம்

by Bella Dalima 23-06-2018 | 3:58 PM
Colombo (News 1st)  கிளிநொச்சி - அம்பாள்குளத்தில் சிறுத்தை ஒன்றை அடித்துக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. சுமார் ஐந்து கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். சிறுத்தையை தாக்கிய விதம் தொடர்பான நிழற்படங்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தினூடாக பொலிஸ் நிலையத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கிடைத்துள்ள நிழற்படங்களை ஆதாரமாகக் கொண்டு சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களை கைது செய்வதற்கான உத்தரவு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தால் வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு நேற்று (22) பிறப்பிக்கப்பட்டது. இதற்கு பொலிஸாரின் உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தார். அம்பாள்குளம் கிராமத்திற்குள் நுழைத்த சிறுத்தை தாக்கியதில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர். இதன் பின்னர் கிராம மக்கள் ஒன்றிணைந்து சிறுத்தையை மடக்கிப்பிடித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.