கொள்ளையர் - பொலிஸாரிடையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு

கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு: கான்ஸ்டபிள் உயிரிழப்பு

by Staff Writer 22-06-2018 | 4:16 PM
Colombo (News 1st)  மாத்தறை நகரிலுள்ள தங்காபரணக் கடையொன்றை கொள்ளையடிக்கச்சென்ற குழுவினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று முற்பகல் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப்பிரயோகத்தில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே உயிரிழந்துள்ளார். அவர் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நகைக்கடையொன்று கொள்ளையடிக்கப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த பகுதிக்கு சென்ற மாத்தறை பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றுள்ளது. கொள்ளைச்சம்பவத்துடன் தொடர்புடையதாக அடையாளங்காணப்பட்ட நால்வர் ​கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். சந்தேகநபர்கள் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.