by Staff Writer 21-06-2018 | 7:45 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - மல்லாகம் சந்தியில் இரு குழுக்களிடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் இதுவரை 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நேற்றிரவு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக யாழ். பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைதான இரண்டு சந்தேகநபர்கள் நேற்று மாலை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மோதல் நடைபெற்ற தினத்தன்று ஏற்கனவே 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மல்லாகம் சந்தியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் மேலும் 10 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் யாழ். பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கூறினார்.
மோதல் இடம்பெற்ற பகுதியிலுள்ள CCTV காணொளிகள் பெறப்பட்டு சந்தேகநபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.