கடலட்டை பிடித்த வௌிமாவட்ட மீனவர்கள் கைது

யாழ். வடமராட்சியில் சட்டவிரோதமாகக் கடலட்டை பிடித்த வௌிமாவட்ட மீனவர்கள் எண்மர் கைது

by Staff Writer 21-06-2018 | 12:20 PM
Colombo (News 1st) யாழ். வடமராட்சி, கிழக்கு கட்டைக்காடு கடற்பரப்பில் சட்டவிரோதமாகக் கடலட்டை பிடித்த வௌிமாவட்ட மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வௌிமாவட்ட மீனவர்கள், இன்று அதிகாலை 2 மணியளவில் உள்ளூர் மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார். வௌிமாவட்ட மீனவர்களின் மூன்று படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. வடமராட்சி கிழக்குக் கடற்பரப்பில் அண்மைக்காலமாக வௌிமாவட்ட மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த வாரம் பாரியளவில் ஆர்ப்பாட்டங்களும் முற்றுகைப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. எனினும், சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபடாமையால், உள்ளூர் மீனவர்கள் சுற்றிவளைப்பில் ஈடுபட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார். அதற்கமைய, கடலட்டை பிடித்த வௌிமாவட்ட மீனவர்கள் இன்று அதிகாலை மடக்கிப்பிடிக்கப்பட்டதாக கட்டைக்காடு பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.