நோர்வே வௌியுறவு செயலாளர் விக்னேஷ்வரனை சந்தித்தார்

இலங்கைக்கு வந்துள்ள நோர்வே வௌியுறவு இராஜாங்க செயலாளர் வட மாகாண முதல்வரை சந்தித்தார்

by Bella Dalima 21-06-2018 | 9:20 PM
Colombo (News 1st)  மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள நோர்வே வௌியுறவு இராஜாங்க செயலாளர் Jens Frolich Holte வட மாகாண முதலமைச்சரை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு கைதடியில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று நண்பகல் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு வட மாகாண முதலமைச்சர் பதிலளித்தார். இதன்போது, தாம் யாரிடமும் தமது பதவியை நீடிக்குமாறு கோரவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
மாகாணத் தேர்தலை அரசு பிற்போட்டு, நீண்ட காலம் கொடுத்தால் ஆளுநரின் ஆட்சி வரும். அவ்வாறு ஆளுநரின் ஆட்சி வந்தால் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் எங்களுக்குத் தந்த அதிகாரம் இல்லாமற்போய்விடும். அதனைத் தவிர்க்க எங்களுடைய ஆட்சியை நீடிக்க வேண்டும் அல்லது தேர்தலை நடத்த வேண்டும்
என்றே தாம் கோரியதாக வட மாகாண முதலமைச்சர் விளக்கமளித்தார். ​ இதேவேளை, குருநகருக்கு விஜயம் செய்த நோர்வேயின் வௌியுறவு இராஜாங்க செயலாளர், மீனவர் குடும்பங்களுடன் இணைந்து கடற்கரையை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டார்.