பிள்ளைகளை பெற்றோருடன் இணைக்க ட்ரம்ப் தீர்மானம்

அமெரிக்காவில் பிரிக்கப்பட்ட பிள்ளைகளை அவர்களது பெற்றோருடன் இணைக்க ட்ரம்ப் தீர்மானம்

by Staff Writer 21-06-2018 | 10:25 AM
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறும் புகலிடக் கோரிக்கையாளர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட அவர்களின் பிள்ளைகளை சேர்த்துவைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் தீர்மானம் தொடர்பிலான உடன்படிக்கையிலும் தாம் கைச்சாத்திடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க - மெக்ஸிகோ எல்லை வழியாக சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அவர்களின் பிள்ளைகளை அவர்களிடமிருந்து பிரித்து வைக்குமாறு ட்ரம்ப் அண்மையில் உத்தரவிட்டிருந்தார். பிள்ளைகளுடன் அமெரிக்காவுக்குள் வருபவர்களை கைது செய்து குடியுரிமை சட்டத்தை மீறியதாகத் தெரிவித்து பிள்ளைகள் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்வதற்கு சட்டத்தில் இடமில்லை என்பதால், பெற்றோரிடமிருந்து பிள்ளைகளைப் பிரித்து எல்லையோரங்களிலுள்ள பிரத்தியேக காப்பகங்களில் வைக்கப்படுகின்ற சூழல் அமெரிக்காவில் உருவாகியுள்ளது. இந்தப் புதிய உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதியிலிருந்து மே மாதம் 31 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் எல்லை வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் 1,940 பேர் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். அவர்களுடன் வந்த சிறுவர், சிறுமியர்கள் 1,995 பேர் தமது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு காப்பகங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ட்ரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கை மனிதநேயமற்ற செயல் என உலகளாவிய ரீதியில் எதிர்ப்பு வௌியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.