by Staff Writer 21-06-2018 | 3:19 PM
சிரியாவின் கிழக்கு கௌடா நகரில் சிரிய அரச ஆதரவுப் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு கௌடா பகுதியை முற்றுகையிடும் நோக்கில் நடத்தப்பட்ட போரில், சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் ஆதரவுப் படையினர் மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டமை விசாரணைகளினூடாக தெரியவந்துள்ளதாக ஐ. நா. சபை தெரிவித்துள்ளது.
வீடுகள் மீது குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தியமை, உணவு வழங்கப்படாமை போன்றவற்றால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ. நா. சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே, டமஸ்கஸிலுள்ள பொதுமக்களின் குடியிருப்புகளின் மீது தொடர்ச்சியாக குண்டுத்தாக்குதல் நடத்தியமை போர்க்குற்றமெனவும் ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.