ஐ.நாவிலிருந்து அமெரிக்கா விலகல்: இலங்கைக்கு சாதகம்

ஐ.நாவிலிருந்து அமெரிக்கா விலகியமை இலங்கைக்கு சாதகமாக அமையும் - ராஜித்த சேனாரத்ன

by Staff Writer 20-06-2018 | 4:18 PM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியமை இலங்கைக்கு சாதகமாக அமையும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோது, அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததைத் தொடர்ந்தே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பிலான பிரேரணை முன்வைக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். அதிகாரம் மிக்க நாடான அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகியமை, நாட்டின் மீதான அழுத்தம் குறைவதற்கு வழிவகுக்கும் எனவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும், இலங்கை கைச்சாத்திட்டுள்ள சர்வதேச பிரகடனங்களுக்கு அமைவாக செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, மாகாண சபைத் தேர்தலை விருப்பு வாக்கு முறையின்கீழ் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலுக்கான சட்டத்திருத்தங்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் கொண்டுவரப்பட்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், முன்னாள் போராளிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பில் கொண்டுவந்த அமைச்சரவைப் பத்திரம் மீண்டும் நிராகரிக்கப்பட்டதாகவும் இன்றைய அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.