விமான நிறுவன முறைகேடு: விமானிகளிடம் விசாரணை

ஶ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள்: விமானிகள் இருவரிடம் நாளை விசாரணை

by Staff Writer 19-06-2018 | 2:52 PM
ஶ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகள் மற்றும் ஶ்ரீலங்கா கேட்டரிங் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க விமானிகள் இருவர் நாளை (20) அழைக்கப்பட்டுள்ளனர். சாட்சியாளர்களில் எவரேனும் ஒருவர் அல்லது நிறுவன மட்டத்தில் அச்சுறுத்தல்கள் விடுக்கப் படாதிருப்பதற்கான பொறுப்பை ஏற்குமாறு ஶ்ரீலங்கன் விமான சேவை தலைவருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. ஶ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகள் மற்றும் ஶ்ரீலங்கா கேட்டரிங் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க விமானிகள் மூவர் நேற்று அழைக்கப் பட்டிருந்தனர். ஶ்ரீலங்கன், மிஹின் லங்கா விமான சேவைகள் மற்றும் ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து இதுவரை 44 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்தார். குறித்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி நீல் உனம்புவ தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைக்காக விசேட பொலிஸ் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி நீல் உனம்புவ தெரிவித்துள்ளார். இந்த முறைகேடுகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்தார். ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அனில் குணரத்ன தலைமையில் இந்த ஆணைக்குழு இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.