முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு விளக்கமறியல்

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கொலை: முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

by Staff Writer 19-06-2018 | 4:04 PM
Colombo (News 1st) வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்ட கைதிகள் மற்றும் சந்தேகநபர்கள் 27 பேரை கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நியோமால் ரங்கஜீவ ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பிரகாரம், எதிர்வரும் 3 ஆம் திகதி வரை சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொலைச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் 12 பேரின் தொலைபேசி உரையாடல்களின் அறிக்கையை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குமாறு மேலதிக நீதிமன்ற நீதவான் தொலைபேசி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.