மைதானத்திற்கு செல்ல மறுத்த இலங்கை வீரர்கள்

கிரிக்கெட் பந்தை மாற்றிய நடுவர்கள்: மைதானத்திற்கு செல்ல மறுத்த இலங்கை வீரர்கள்

by Bella Dalima 16-06-2018 | 10:42 PM
Colombo (News 1st)  இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் ஆரம்பமானது. நடுவர்கள் பந்தை மாற்றியமையே அதற்கான காரணமாகும். இது தொடர்பில் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க , இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க மற்றும் போட்டி நடுவரான ஶ்ரீநாத் ஆகியோருக்கு இடையில் தீவிரமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. போட்டியின் இரண்டாம் நாளான நேற்று (15) மாலை தனஞ்சய டி சில்வா கையிலிருந்த பென்டேச் ஒன்றின் மூலம் பந்தின் தன்மையை மாற்றுவதற்கு முயற்சித்ததாக சந்தேகித்ததையடுத்து, நடுவர்கள் பந்தை பரிசோதித்தனர். அதன்பின்னர் நடுவர்கள் பந்தை மாற்றியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும், இந்த சம்பவத்தினால் இலங்கை அணி வீரர்கள் இன்றைய ஆட்டத்திற்காக மைதானத்திற்கு செல்ல மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, போட்டி நடுவர் இலங்கை அணி வீரர்கள் வீற்றிருந்த இடத்திற்கு சென்று இது தொடர்பில் கலந்துரையாடினார். பின்னர் இரு அணிகளுக்குமிடையிலான மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பமாகியது.