காணாமற்போயிருந்த பெண் மலைப்பாம்பின் வயிற்றில்!  

காணாமற்போயிருந்த பெண்ணின் சடலம் 23 அடி மலைப்பாம்பின் வயிற்றில் கண்டுபிடிப்பு 

by Bella Dalima 16-06-2018 | 6:13 PM
காணாமற்போயிருந்த இந்தோனேஷியப் பெண்ணின் சடலம் 23 அடி மலைப்பாம்பின் வயிற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவின் முனா தீவில் உள்ள பெர்சியாபான் லாவேலா கிராமத்தைச் சேர்ந்தவர் வா திபா (வயது 54). கடந்த 14 ஆம் திகதி இரவு காய்கறிகள் பறிப்பதற்காக தோட்டத்திற்கு சென்ற வா திபா வீட்டிற்குத் திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த வா தீபாவின் உறவினர்கள், அவரை பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். ஆனால், எங்கு தேடியும் அவரைக் காணவில்லை. இறுதியாக தோட்டத்திற்குச் சென்று அவரைத் தேடியபோது, அங்கு 23 அடி கொண்ட ராட்சத மலைப்பாம்பு ஒன்று நகர முடியாமல் படுத்திருந்தது. மலைப்பாம்பு கிடந்த இடத்தில் இருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் வா திபாவின் செருப்பு கிடந்துள்ளது. இதனையடுத்து, சந்தேகமடைந்த கிராம மக்கள் மலைப்பாம்பைக் கொன்று அதன் வயிற்றுப்பகுதியைக் கத்தியால் கிழித்துள்ளனர். அப்போது மலைப்பாம்பின் வயிற்றுக்குள் வா திபா சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவருடைய தலையை முதலில் விழுங்கியுள்ள பாம்பு பின்னர் உடல் பகுதியை உள்ளே இழுத்துள்ளது. வா திபாவின் தோட்டம் செங்குத்தான பாறைகள், குகைகள் என கரடு முரடாண பகுதியில் உள்ளது. அங்கு பாம்புகள் நடமாட்டம் என்பது சர்வசாதாரணமானது என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.