பரீட்சைக் கட்டணங்களை செலுத்த சந்தர்ப்பம்

பரீட்சைக் கட்டணங்களை பிரதேச, மாவட்ட செயலகங்கள் ஊடாக செலுத்த சந்தர்ப்பம்

by Staff Writer 15-06-2018 | 3:39 PM
Colombo (News 1st)  அனைத்து பரீட்சைகளுக்குமான கட்டணங்களை பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்கள் ஊடாக செலுத்துவற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் பரீட்சைகளுக்கான அனுமதிப்பத்திரம் கிடைக்காத பரீட்சார்த்திகளுக்கு புதிய நடைமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் குறிப்பிட்டார். தபால் ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று 5ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இதனால் தபால் மத்திய நிலையத்தில் 13 இலட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் தேங்கியுள்ளன. அத்துடன், வௌிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகக் கடிதங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேங்கியுள்ளதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. தபால் நிலையப் பொறுப்பதிகாரிகளின் சேவையை நிரந்தர சேவையாக உள்வாங்காமை உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 4 ஆம் திகதி நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.