பாலித்த ரங்கே பண்டாரவின் மகன் பிணையில் விடுதலை

பாலித்த ரங்கே பண்டாரவின் மகன் பிணையில் விடுதலை

by Bella Dalima 14-06-2018 | 5:39 PM
Colombo (News 1st) வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவரின் வாகன அனுமதிப்பத்திரம் நீதிமன்ற பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இருந்து அம்பியூலன்ஸ் வண்டியில் சிலாபம் நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட சந்தேகநபரை நீதவான் பரீட்சித்துள்ளார். யசோத ரங்கே பண்டார வாகன விபத்தின் மூலம் சேதமாக்கிய வீட்டை புனரமைத்துக்கொடுப்பதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். கடந்த 6 ஆம் திகதி அதிகாலை 12.15 அளவில் ஆராய்ச்சிக்கட்டு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தின் போது அவர் உள்ளிட்ட நால்வர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.