ஞானசார ​தேரருக்கு 6 மாத சிறைத்தண்டனை

ஞானசார ​தேரருக்கு 6 மாத சிறைத்தண்டனை

by Bella Dalima 14-06-2018 | 7:20 PM
Colombo (News 1st) கலகொடஅத்தே ஞானசார ​தேரருக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று 6 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தியமை மற்றும் நீதிமன்றத்திற்குள் அத்துமீறி பிரவேசித்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளிலும் கலகொடஅத்தே ஞானசார ​தேரர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளதால் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அந்த குற்றச்சாட்டுகளுக்கு தனித்தனியாக தலா 6 மாதங்கள் என்ற அடிப்படையில் ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டதுடன், அந்த சிறைச்தண்டனை ஒரே தடவையில் 6 மாதங்களில் முடிவடையும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. சந்தியா எக்னலிகொடவிற்கு 50 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்குமாறும் நீதவான் உதேஷ் ரணதுங்க இன்று கலகொடஅத்தே ஞானசார ​தேரருக்கு உத்தரவிட்டார். அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் மூன்று மாதங்களுக்கு சிறைத்தண்டனையும் 3000 ரூபா தண்டப்பணமும் அறவிடப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமற்போன சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சந்தேகத்தின் பேரில் கைது செய்த இராணுவப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 2016 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது ஞானசார தேரர் அத்துமீறி நீதிமன்றத்திற்குள் பிரவேசித்திருந்தார்.