காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலக அமர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருமலையில் முற்றுகைப் போராட்டம்
by Bella Dalima 13-06-2018 | 7:46 PM
Colombo (News 1st) காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகத்தின் இன்றைய அமர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருகோணமலையில் இன்று முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.
திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் காணாமற்போனோர் அலுவலகத்தின் அமர்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மண்டப நுழைவாயிலை மறித்து காணாமற்போனோரின் உறவினர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
காணாமற்போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், காணாமற்போனோரின் உறவினர்களுடன் கலந்துரையாடியதை அடுத்து, அதிகாரிகளை மண்டபத்திற்குள் பிரவேசிக்க மக்கள் அனுமதி வழங்கினர்.
இதனை அடுத்து, அலுவலகத்தின் செயற்பாடு தொடர்பாக காணாமற்போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் விளக்கமளித்தார்.
மண்டபத்தில் காணாமற்போனோரின் உறவுகள் அதிகளவில் கூடியிருந்ததுடன், அவர்களின் கருத்துக்களை முன்வைக்கவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இந்த கூட்டத்தின் பின்னர் ஊடக சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, காணாமற்போனோருக்கான அலுவலகத்தை அமைப்பது ஜெனிவாவின் தேவைக்காக அல்லவெனவும் இலங்கை பொறிமுறையைப் பலப்படுத்தவே செய்வதாகவும் சாலிய பீரிஸ் குறிப்பிட்டார்.
மேலும், அரசாங்கம் மாறினாலும் இந்த அலுவலகம் செயற்படும் என அவர் உறுதியாகக் கூறினார்.
எனினும், கூட்டத்தின் பின்னர் கருத்துத் தெரிவித்த காணாமற்போனோரின் உறவினர்கள், அலுவலகம் மீதான அதிருப்தியை வௌியிட்டனர்.