இலங்கை முதலீட்டு சபைக்கு அழுத்தம் விடுக்கப்பட்டதா?

இலங்கை முதலீட்டு சபைக்கு அழுத்தம் விடுக்கப்பட்டதா என ஆராயுமாறு அறிவிப்பு

by Bella Dalima 13-06-2018 | 8:28 PM
Colombo (News 1st)  உடன்படிக்கைகளுக்கு முரணாக செயற்பட்டமைக்கு எதிராக மிஹின் எயார் தனியார் நிறுவனம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு முடியாத வகையில், இலங்கை முதலீட்டு சபைக்கு அழுத்தம் விடுக்கப்பட்டதா என்பது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு, விசாரணை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது. ஶ்ரீலங்கன், மிஹின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இலங்கை முதலீட்டு சபையின் முதலீட்டுப் பணிப்பாளர் இன்று சாட்சியம் வழங்கினார். மிஹின் லங்கா நிறுவனம் தொடர்ந்தும் நட்டத்தை எதிர்கொள்ளும் போது அது தொடர்பில் முதலீட்டு சபையின் செயற்பாடுகள் மற்றும் மேற்பார்வை திணைக்களம் நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் ஆணைக்குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் இலங்கை முதலீட்டு சபையினால், மிஹின் லங்கா நிறுவனத்திற்கு 385.314 மில்லியன் வரி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவில் தெரியவந்தது. அத்துடன், ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் 2012 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரை 254 பில்லியன் ரூபாவும், 2015 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆம் ஆண்டு வரை 307 பில்லியன் ரூபாவும் பொருள் இறக்குமதியின் போது நிவாரணமாகப் பெற்றுக் கொண்டுள்ளது. 2012 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆம் ஆண்டு வரை ஶ்ரீலங்கா கேட்டரிங் நிறுவனம் 5 பில்லியன் வரி நிவாரணம் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.