பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிடமிருந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் 05 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

by Staff Writer 11-06-2018 | 3:40 PM

முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடம் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களம் சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

முறிகள் விவகாரம் தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள பேர்ப்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய நிறுவனமொன்றில் இருந்து 10 லட்சம் ரூபா பெற்றுக்கொண்டமை தொடர்பிலேயே விசாரணை இடம்பெற்றுள்ளது. இன்று காலை 10 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வாக்குமூலம் அளித்ததன் பின்னர் பிற்பகல் 3 .30 அளவில் அங்கிருந்து வௌியேறினார். வோல்ட்டன் ரோ நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்டதாக கூறப்படும் 1 மில்லியன் ரூபா தொடர்பில் தம்மிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிடம் நியூஸ்பெர்ஸ்ட் வினவியபோது அவர் குறிப்பிட்டார். மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்படவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.