திகன சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் !

திகன சம்பவத்தின் சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

by Staff Writer 11-06-2018 | 5:16 PM

கண்டி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அமைதியற்ற சூழலை உருவாக்கியமை தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சந்தேகநபர்கள் 31 பேரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் இன்று தெல்தெனிய மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஷானக கலன்சூரிய முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, மொரகஹமுவ பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பத்துப்பேர் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ரங்கல பகுதியில் அமைதியற்ற சூழலை ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையிலும், திகன பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 19 பேரில் 13 பேர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மஹசொன் இயக்கத்தைச் சேர்ந்த ஐவரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மஹசொன் இயக்கத்தின் அமித் வீரசிங்க அநுராதபுரம் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் ஏனைய சந்தேகநபர்கள் 30 பேரும் பல்லேகலை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்