பிணை கோருவது முறையல்ல - மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்

அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோருக்கு பிணை கோருகின்றமை சட்டபூர்வமற்ற நடவடிக்கை - சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்

by Staff Writer 11-06-2018 | 8:50 PM
 

அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகியோருக்கு பிணை கோருகின்றமை சட்டபூர்வமற்ற நடவடிக்கையென சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஆட்சேபனை கோரிக்கையின் மூலம் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவு ஆட்சேபனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதே தவிற பிணை கோரப்படவில்லையென்பதால் அந்த கோரிக்கையை பரிசீலிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அதிகாரிமில்லையென மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இதன்போது சுட்டிக்காட்டினார். சந்தேகநபர்கள் சார்பில் பிணைமனு சமர்ப்பித்தால் அது தொடர்பில் ஆராயும் சட்டபூர்வ அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேன ஆகிய இரண்டு சந்தேகநபர்களுக்கும் பிணை வழங்குமாறு கோரும் ஆட்சேபனை மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பீ.பத்மன் சூரசேன மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோரினால் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டது. முறிகள் கொடுக்கல் வாங்கல் மற்றும் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் ஊடகங்களில் தகவல்களை வௌியிடும் நோக்கிலேயே சட்டமா அதிபர் திணைக்களம் செயற்படுவதாக அர்ஜூன் அலோசியஸ் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரபன தெரிவித்த கருத்துக்கு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இன்று பகிரங்க நீதிமன்றத்தில் இன்று கடும் அதிருப்தியை வௌியிட்டார். காமினி மாரபன போன்ற சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் இவ்வாறான கருத்தினை வௌியிட்டுள்ளமை அவரின் அனுபவத்திற்கு தகுதியான விடயமல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.