பொலிஸாருக்கும் பாதாளக்குழுவினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு: இருவர் கொலை
by Staff Writer 09-06-2018 | 4:05 PM
Colombo (News 1st)
கண்டி - வத்தேகம பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் பாதாளக்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் பாதாளக்குழு உறுப்பினர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் மனுஷ் மற்றும் அங்கொட லொக்கா எனும் பாதாளக்குழு தலைவர்களின் உதவியாளர்களாக செயற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
உயிரிழந்த ஒருவர் பய்லா எனும் ருமல்ஷ இரேஷ் மதுஷங்க நவகமுவ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ரணால, அத்துருகிரிய, ஹோமாகம ஆகிய பகுதிகளில் கப்பப் பணத்தை சேகரிக்கும் நடவடிக்கைகளில் சந்தேகநபர்கள் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
சந்தேகநபர் ஒருவர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று வத்தேகம - தெல்தெனிய வீதியின் மடவள பகுதியில் அவசர வீதித்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது சொகுசுக்காரொன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், அதிலிருந்த சந்தேகநபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இதன்போது காயமடைந்த சந்தேகநபர்கள் இருவரும் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.