இலங்கைக்கு இரண்டாவது தங்கம்

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு இரண்டாவது தங்கம்

by Staff Writer 09-06-2018 | 8:56 PM
Colombo (News 1st) ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கை இன்று இரண்டாவது தங்கப்பதக்கத்தை சுவீகரித்தது. இதேவேளை, மகளிருக்கான 4X100 மீட்டர் அஞ்சலோட்டத்தில் இலங்கை பதக்கம் வெல்லும் வாய்ப்பிருந்தும் நாட்டின் விளையாட்டுத்துறை அதிகாரிகளின் உறுதியற்ற தீர்மானத்தால் அந்த வாய்ப்பு பறிபோனது. ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் ஜப்பானில் நடைபெறுவதுடன் மகளிருக்கான 100 மீட்டர் அஞ்சலோட்டத்தில் வெண்கலப்பதக்கம் வென்ற ஹொங்கொங் குழாம் அதற்காக 47 செக்கன்ட்களை எடுத்துக்கொண்டது. என்றாலும், சமீபத்தில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் மகளிருக்கான 4X100 மீட்டர் அஞ்சலோட்டத்தை இலங்கை குழாம் 46.23 செக்கன்ட்களில் கடந்து தங்கப்பதக்கம் வென்றிருந்தது. ஆனாலும், நேரப்பெறுதி அடிப்படையில் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கை குழாம் பதக்கம் வெல்ல முடியாது எனக்கூறி விளையாட்டுத்துறை அதிகாரிகள் அணியை அனுப்ப மறுப்புத் தெரிவித்தனர். இலங்கை 4X100 மீட்டர் அஞ்சலோட்டக் குழாத்தின் அடைவு மட்டம் போதாது என்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். எனினும், அவர்கள் கூறியது தவறு என்பது இன்று நிரூபணமானது. மகளிருக்கான 4X100 மீட்டர் அஞ்சலோட்டத்தில் மூன்றாமிடம் பெற்ற ஹொங்கொங் குழாம் 47 செக்கன்ட்களை எடுத்துள்ளது. இலங்கை குழாமோ அதற்காக 46.23 செக்கன்ட்களையே எடுத்துள்ளது என்பதால் இந்தப் போட்டிகளில் பங்கேற்றிருந்தால் நிச்சயம் பதக்கம் வென்றிருக்கலாம் என்பது நிதர்சனம். இதேவேளை, மகளிருக்கான 3000 மீட்டர் தடைதாண்டல் ஓட்டத்தில் பாரமி வசந்தி தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். போட்டியை அவர் 10 நிமிடங்கள், 21.54 செக்கன்ட்களில் பூர்த்தி செய்தார். மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் டில்ஷி குமாரசிங்க வெண்கலப்பதக்கம் வென்றார். அதற்காக அவர் 2 நிமிடங்கள், 4.53 செக்கன்ட்களை எடுத்தார். ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கை 2 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கத்தை வெற்றிகொண்டுள்ளது.