நான்கு மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை

நான்கு மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை

by Staff Writer 08-06-2018 | 4:00 PM
Colombo (News 1st)  பலத்த மழை காரணமாக இரத்தினபுரி, கேகாலை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 6 மணி வரை இந்த முன்னெச்சரிக்கை அமுலில் காணப்படும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் புவிசரிதவியல் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். மண் சரிவிற்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இடர் முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகளுடைய அறிவித்தல்களுக்கு அமைய செயற்படுமாறும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் புவிசரிதவியல் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இதேவேளை, களு கங்கையின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனினும், மழையுடனான வானிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் கொத்மலை மற்றும் கெனியன் ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது