இலங்கைக்கு 1 தங்கம், 3 வௌ்ளிப் பதக்கங்கள்

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு 1 தங்கம், 3 வௌ்ளிப் பதக்கங்கள்

by Staff Writer 08-06-2018 | 8:41 PM
Colombo (News 1st)  ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இரண்டாம் நாளான இன்று இலங்கை ஒரு தங்கம் 3 வெள்ளி அடங்கலாக 4 பதக்கங்களை வென்றுள்ளது. இலங்கை அணித்தலைவர் அருண தர்ஷன 400 மீட்டர் ஓட்டத்தில் ஆசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் ஜப்பானில் நடைபெறுகின்றன. இதில் ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டத்தின் இறுதிப் போட்டியில் அருண தர்ஷன மற்றும் பசிந்து கொடிகார ஆகியோர் பங்கேற்றனர். போட்டியை 45.79 செக்கன்ட்களில் பூர்த்தி செய்த அருண தர்ஷ, 19 வருடங்கள் பழமை வாய்ந்த ஆசிய சாதனையை முறியடித்து தங்கப்பதக்கத்தை தன்வசப்படுத்தினார். இது இந்தப் போட்டிகளில் ஆறு வருடங்களின் பின்னர் இலங்கை வென்ற முதல் தங்கப்பதக்கமாகும். 46.96 செக்கன்ட்களில் போட்டியைக் கடந்த பசிந்து கொடிகார வெள்ளிப்பதக்கம் வென்றார். மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தை 54.03 செக்கன்ட்களில் நிறைவு செய்த டில்ஷி குமாரசிங்க தனது சிறந்த காலப்பெறுதியுடன் வெள்ளிப்பதக்கத்தை வெற்றிகொண்டார். மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் அமாஷா டி சில்வா வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கினார். அதற்காக அவருக்கு 11.71 செக்கன்ட்கள் சென்றன. ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கை இதுவரை 20 பதக்கங்களை வென்றுள்ளதுடன், இந்த முறை இரண்டு நாட்களில் 4 பதக்கங்களை சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.