நகர சபை உறுப்பினரின் வீட்டிலிருந்த சிறுவன் மீட்பு

நகர சபை உறுப்பினரின் வீட்டிலிருந்த 11 வயது சிறுவன் பொலிஸாரால் மீட்பு

by Staff Writer 07-06-2018 | 5:47 PM
Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தலவாக்கலை - லிந்துலை நகர சபை உறுப்பினர் அனுருத்த மஞ்சநாயக்கவின் வீட்டிலிருந்த 11 வயது சிறுவன் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். இந்த சிறுவன் மருத்துவப் பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நகர சபை உறுப்பினரின் வீட்டில் சிறுவனை வேலைக்கமர்த்தியமைக்காக தாய் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 8 வருடங்களாக சிறுவனும் அவரது தாயும் குறித்த வீட்டில் வசித்து வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சிறுவனின் தாய் வாய்பேச முடியாதவர் என்பதுடன், சிறுமி பேச்சுத்திறன் குறைந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டனர். மருத்துவ அறிக்கை கிடைத்தவுடன் சிறுவனையும் தாயையும் நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குழந்தை கடத்தல் சம்பவம் தொடர்பில் தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர் அனுருத்த மஞ்சநாயக்க எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் நுவரெலியா தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை ​மேற்கொண்டு வருகின்றனர்.