மின்சார கம்பங்களில் சட்டவிரோத கேபிள் இணைப்புகள்

யாழில் மின்சார கம்பங்களில் சட்டவிரோத கேபிள் இணைப்புகள்: இதுவரை நடவடிக்கை இல்லை

by Bella Dalima 02-06-2018 | 8:53 PM
Colombo (News 1st)  வட மாகாணத்தில் பாதுகாப்பற்ற முறையில் மின்சார கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள கேபிள் இணைப்புகளை அகற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் மின்சார கம்பங்களினூடாக கேபிள் வயர்கள் பொருத்தப்பட்டுள்ளமையால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றமை தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் சுட்டிக்காட்டி ஒரு வாரம் கடந்துள்ளது. எனினும், பாதுகாப்பற்ற வகையில் மின்கம்பிகளுக்கு கீழாக கேபிள் இணைப்புகள் பொருத்தப்பட்டுள்ளமையால் , கேபிள் வயர்களூடாக மின்சாரம் கடத்தப்பட்டு யாழ். மாவட்டத்தில் 7 உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. எதுவித அனுமதியும் பெறப்படாது மின் கம்பங்களினூடாக கேபிள் இணைப்புகள் பொருத்தப்படுவதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்தார். ​ கேபிள் வயர்கள் மின்சார கம்பங்களினூடாக இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும், அந்த குழுவினரால் இதுவரை அறிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் எப்போது அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என கூற முடியாது எனவும் அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டார். எவ்வாறாயினும், அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னரே உரிய நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். யாழ். மாவட்டத்தில் பாதுகாப்பற்ற முறையில் மின்சாரக் கம்பங்களினூடாக இணைக்கப்பட்டுள்ள கேபிள் வயர்கள் இதுவரை அகற்றப்படாத நிலையிலுள்ளமையை அவதானிக்க முடிந்தது. அறிக்கை கிடைப்பது எப்போது? உயிரிழப்புகளை தடுக்க என்ன வழி?