கோட்டாபய மேன்முறையீடு: நீதிபதி விலகல்

கோட்டாபய ராஜபக்ஸவின் மேன்முறையீட்டு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி ஜனத் டி சில்வா அறிவிப்பு

by Bella Dalima 31-05-2018 | 9:13 PM
Colombo (News 1st)  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையில் இருந்து தாம் விலகிக்கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனத் டி சில்வா இன்று நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார். அவன்ற் கார்ட் மெரிடைம் சர்விஸஸ் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக்களஞ்சியமொன்றை நடத்திச்செல்ல அனுமதித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாகத் தெரிவித்து ​கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தாம் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்ஸ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மேன்முறையீட்டு மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனத் டி சில்வா ஆகியோர் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தனிப்பட்ட காரணங்களால் தாம் இந்த வழக்கு விசாரணைகளில் இருந்து விலகிக்கொள்வதாக நீதிபதி ஜனத் டி சில்வா இதன்போது தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மனு மீதான விசாரணையை நாளை வரை ஒத்திவைக்குமாறு நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.