அழிவிற்கு இட்டுச்செல்லும் புகையிலை

அழிவிற்கு இட்டுச்செல்லும் புகையிலை: வருடத்தில் 7 மில்லியன் பேர் உயிரிழப்பு

by Bella Dalima 31-05-2018 | 3:27 PM
Colombo (News 1st)  மனித குலத்தை அழிவிற்கு இட்டுச்செல்லும் முக்கியமான காரணிகளில் ஒன்று தான் புகையிலை. ஒவ்வொரு வருடமும் மார்ச் 31 ஆம் திகதி உலக புகையிலை ஒழிப்பு தினமாக உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளது. அந்த வகையில், 'புகையிலையும் இருதய நோயும்' என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த வருட உலக புகையிலை ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. புகை பிடிப்பதால் இரத்தக்குழாய் பாதை பாதிப்படைந்து கொழுப்பு படிதல் மற்றும் இரத்தம் உறைதல் என்பன அதிகரிக்கின்றன. இதனால் மனிதனுக்கு இருதய நோய் ஏற்பட்டு அதுவே மரண வாயிலாகவும் உருமாற்றம் பெற்றுவிடுகின்றது. புகையிலையில் உள்ள நிக்கோடின் இதய துடிப்பை அதிகரித்து இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. நிக்கோடினின் தாக்கம் வெறுமனே புகைப்பிடிப்பவரை மாத்திரமன்றி அவர் வௌியிடும் புகையை சுவாசிப்பவரையும் ஆட்கொள்கின்றது. உலகளாவிய ரீதியில் புகைப்பழக்கத்தினால் இருதய நோய் ஏற்பட்டு 17 வீதமானோர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, புகையிலையினால் வருடமொன்றுக்கு 7 மில்லியன் பேர் வரை உயிரிழப்பதாகவும் ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது. நடுத்தர மற்றும் கீழ்த்தர வருமானமுடைய நாடுகளிலேயே புகையிலை பாவனை அதிகரித்துள்ளதோடு சுமார் 80 வீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. புகையிலையினால் தமது வாழ்வை மாத்திரமன்றி தம்மை சுற்றியுள்ளவர்களின் எதிர்காலத்தையும் தொலைக்கும் நிலையிலிருந்து எமது சமூகம் மீள வேண்டும். ஒவ்வொரு நாளையும் புகையிலைக்கு எதிரான நாளாக மாற்றி, சமூகத்திற்கு சிறந்தவொரு எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது இளம் தலைமுறையினரின் தார்மீக பொறுப்பும் கடமையுமாகும்.