by Bella Dalima 31-05-2018 | 4:26 PM
Colombo (News 1st)
தமிழக அகதி முகாமிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் நாடு திரும்பிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் - ஊர்மனை பகுதியில் இலங்கை கடற்படையினரால் இவர்கள் நேற்றிரவு (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் தினேஷ் பண்டார தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் இரண்டு சிறுவர்களும் மூன்று ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவர்கள் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் 20 வருடங்களுக்கு முன்னர் தமிழகத்திற்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர்களை இன்று மன்னார் நீதமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து படகு மூலம் நாட்டிற்கு வருகை தந்த 6 பேர் கடந்த 15 ஆம் திகதி காங்கேசன்துறையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.