ரயில்வே பணிப்பகிஸ்கரிப்பு தொடர்கிறது

ரயில்வே சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை குறித்து விசாரணை

by Staff Writer 30-05-2018 | 11:49 AM
ரயில்​வே தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் பணி பகிஷ்கரிப்பின்போது ரயில் எஞ்சின்கள் உள்ளிட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே மேலதிக பொதுமுகாமையாளர் கலாநிதி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் எஞ்சின்கள் மற்றும் லுனுவில ரயில் நிலையம் உள்ளிட்ட சில இடங்களிலுள்ள ரயில் மார்க்கங்களை நாசக்கார கும்பல்கள் சேதப்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக இன்று காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பாணந்துறை மற்றும் பொல்கஹவெல நோக்கி சேவையில் ஈடுபடவிருந்த ரயில்களை இரத்துச் செய்ய நேரிட்டதாகவும் ரயில்வே மேலதிக பொதுமுகாமையாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ரயில் சமிக்ஞை கட்டமைப்பிற்கு சேதம் விளைவிக்கப்பட்டதால் புத்தளம் ரயில் மார்க்கத்தில் ரயில்சேவைகள் தாமதமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் ரயில் எஞ்சின்கள் உள்ளிட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே தொழில்நுட்ப உத்தியோகத்த்ர்கள் சங்கம் மறுத்துள்ளது. இத்தகைய சம்பவங்களுடன் தமது உறுப்பினர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என சங்கத்தின் தலைவர் சம்பத் ராஜித்த தெரிவித்துள்ளார். ரயில்வே தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் நேற்று பிற்பகல் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை நாளை பிற்பகல் வரை முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். சம்பள முரண்பாட்டிற்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்குமாறு கோரியே ரயில்வே தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் இந்த பணி பகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.