பிரதமரின் கருத்திற்கு மக்கள் அதிருப்தி

மண்ணில் அமர்ந்து படியுங்கள்: பிரதமரின் கருத்திற்கு மக்கள் அதிருப்தி

by Bella Dalima 30-05-2018 | 7:51 PM
Colombo (News 1st)  பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கு விஜயத்தின் போது தெரிவித்த சில கருத்துக்கள் தொடர்பில் பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பிரதமர் தலைமையில் நேற்று முன்தினம் (28) நடைபெற்ற கூட்டத்தின் பின்னர், செயலகத்திற்கு முன்பாக மக்கள் கையளித்த சுமார் 30 கடிதங்களை கைவிட்டுச் சென்றிருந்தனர். கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரினால் வேலைவாய்ப்பு கோரி கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதங்களும் அதில் காணப்பட்டன. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் வழங்கிய பதில்கள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் வடக்கு விஜயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஶ்ரீஸ்கந்தராசா இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பின்வருமாறு கருத்து வௌியிட்டிருந்தார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அடிப்படை வசதிகளின்றி பாடசாலைகளில் கல்வி கற்கின்றார்கள். பிரதமர் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட போது பாடசாலைகளுக்கு கட்டடங்கள் அவசியம் இல்லை. மண்ணில் இருந்து படியுங்கள் என்று கூறியுள்ளார். இவ்வாறு தென் பகுதியில் கூறுவீர்களா? மக்கள் எழுத்து மூலம் வழங்கிய ஆவணங்களை கைவிட்டுச் சென்றுள்ளார்கள்.
என தெரிவித்தார். பிரதமர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராகவும், பிரதமருக்கு ஆதரவாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஶ்ரீஸ்கந்தராசா வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.