நாட்டின் பல பகுதிகளில் மின் விநியோகம் தடை

நாட்டின் பல பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது

by Bella Dalima 30-05-2018 | 4:40 PM
Colombo (News 1st)  பலத்த காற்று காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்தது. தெல்தெனிய, தம்புள்ளை, நாவுல, குண்டசாலை, பதுளை, ராகம ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டார். மின் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால் இலங்கை மின்சார சபையின் பிரதான அழைப்பு மத்திய நிலையத்திற்கு 1987 என்ற இலக்கத்தினூடாகவும் மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வள அமைச்சின் 1901 என்ற இலக்கத்தினூடாகவும் இலங்கை மின்சார சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிப்போர் 1910 என்ற இலக்கத்தினூடாகவும் அறிவிக்க முடியும். இதேவேளை, மின்சார சபை பொறியியலாளர்களின் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளரிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. அதற்கமைய, தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மின் விநியோகத்தை சீரமைக்கும் நடவடிக்கைகளில் இடையூறுகள் ஏற்படக்கூடும் என அவர் பதிலளித்தார். இதேவேளை, தமது சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்தது. சம்பளப் பிரச்சினை காரணமாக கடந்த 8 ஆம் திகதி தாம் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்ததாக மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு குறிப்பிட்டார்.