அடுத்த அமர்வு முல்லைத்தீவில்

காணாமற்போனோர் தொடர்பிலான அடுத்த அமர்வு முல்லைத்தீவில்

by Bella Dalima 30-05-2018 | 4:30 PM
Colombo (News 1st)  காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகத்தின் அடுத்த அமர்வை முல்லைத்தீவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. காணாமற்போனோர் தொட்பில் மக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் அமர்வுகள் ஏற்கனவே மன்னார் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அமர்வு மாவட்ட செயலகத்தில் ஜூன் மாதம் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய பகுதிகளில் காணாமற்போனவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அலுவலகத்தின் ஆணையாளர்கள் சந்தித்து கருத்துக்களைக் கேட்டறியவுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஒட்டுசுட்டன், துணுக்காய் கிழக்கு, மாந்தை மற்றும் மணலாறு ஆகிய பகுதிகளிலும் அமர்வுகள் இடம்பெறவுள்ளன. முல்லைத்தீவு மாவட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகளும் இந்த அமர்விற்காக அழைக்கப்பட்டுள்ளதாக காணாமற்போனவர்கள் தொடர்பிலான அலுவலகத்தின் தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறிப்பிட்டார்.