மன்னாரில் மேலும் சில எலும்பு எச்சங்கள் மீட்பு

மன்னாரில் அகழ்வுகளின் போது மேலும் சில எலும்பு எச்சங்கள் மீட்பு

by Bella Dalima 29-05-2018 | 3:45 PM
Colombo (News 1st)  மன்னார் - சதொச கட்டிட வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுகளின் போது இன்று மேலும் சில எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 17 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, குறித்த இடத்தில் நேற்று (28) காலை மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது மேலும் பல எலும்புகள் மீட்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் கூறினார். மன்னார் மாவட்ட நீதவான், சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளும் அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பகுதிக்கு சென்றுள்ளனர். மன்னார் தீவின் நுழைவாயில் பகுதியில் லங்கா சதொச விற்பனை நிலையம் ஒன்று அமைப்பதற்கான பணிகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன. குறித்த இடத்திலிருந்து அகழ்வு செய்யப்பட்ட மண், மன்னார் - எமில்நகர் பகுதி வீடு ஒன்றில் கொட்டப்பட்டபோது அதில் மனித எச்சங்கள் இருப்பதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.