மகிந்தவின் ஆதரவாளர்கள் விமர்சிக்கின்றார்கள்

மகிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளர்கள் முகப்புத்தகத்தில் தம்மை விமர்சிப்பதாக சிவி.விக்னேஷ்வரன் தெரிவிப்பு

by Bella Dalima 29-05-2018 | 7:04 PM
Colombo (News 1st)  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளர்கள் முகப்புத்தகத்தில் தன்னை விமர்சித்து வருவதாக வட மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். கொலை மிரட்டல் விடுத்து தம்மை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் செயற்படுவதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதனால், மேலதிகப் பாதுகாப்பை பெற முடியாதா என வட மாகாண முதலமைச்சரிடம் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் வழங்கும் வகையில் முதலமைச்சர் அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தனக்குப் போதுமான பாதுகாப்பு சட்டப்படி வழங்கப்பட்டுள்ளதாகவும் தேவையேற்படின் மேலதிக பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பரிசீலிக்க முடியும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 1958 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும் பிள்ளைகளைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது போன்றே அரசாங்கங்கள் செயற்படுவதாகவும் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். உயிருக்கு ஆபத்து எப்போதும் எவருக்கும் வர முடியும் எனவும் மக்களுக்கான கடமைகளை சரியாகச் செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தமக்கு எதிராக முகப்புத்தகத்தில் எழுதிய ஒருவரைப் பற்றி தமது அலுவலர்கள் ஆராய்ந்த போது, அந்நபர் காலியில் வசிக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர் என்பது தெரிய வந்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ஷ அரசாங்கம் அன்றைய காலத்தில் வௌிப்படையாக தம்மை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே முயற்சித்ததாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனநாயக நாடுகளின் ஒத்துழைப்பினால் உருவாகியுள்ள தற்போதைய அரசாங்கத்தினால் தம்மை முன்பு போன்று கட்டிவைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டமையை இன்று சிங்கள மக்களும் , சர்வதேசமும் உணர்ந்து கொண்டுள்ளதாகவும் ஜெனீவா இதுவரையில் கொடுத்துள்ள காலக்கெடு விரைவில் முடிவுக்கு வரப்போவதையும் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் ஞாபகப்படுத்தியுள்ளார். இதனால் இலங்கை அரசாங்கம் செய்வதறியாது தடுமாறுவதாகவும் பொம்மைகளை பெற்றுத்தருவதாக வாக்களிக்கின்றார்களே தவிர, 70 வருடப் பிரச்சினைக்குத்தீர்வு வழங்குவதாகக் கூறுவதில்லை எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.