by Bella Dalima 29-05-2018 | 4:10 PM
Colombo (News 1st)
பத்தேகம நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பிச்சென்ற கைதிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்தேகம பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உப்புல்தெனிய குறிப்பிட்டார்.
பத்தேகம சிறைச்சாலை அதிகாரிகளைத் தாக்கிய பிரதான சந்தேகநபரே நேற்று (28) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஏனைய 5 கைதிகள் தப்பிச்சென்றமை தொடர்பில் மாத்தறை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கைதிகளைத் தேடும் நடவடிக்கைகளில் 15 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
கைவிரல் அடையாளங்களை எடுக்க முற்பட்ட வேளையிலேயே கைதிகள் 6 பேர் தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பியோடிய கைதிகளில் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும், கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும், பால்ய திருமணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவரும் அடங்குகின்றனர்.
கைதிகளை சுற்றிவளைப்பதற்காக பத்தேகம பகுதியில் பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.