by Staff Writer 28-05-2018 | 7:41 PM
Colombo (News 1st) மன்னார் சதோச கட்டட வளாகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுகளின்போது மேலும் சில எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்ட நீதவான் ஆசிர்வாதம் கிறேஷியன் அலெக்ஸ்ராஜா
அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பகுதிக்கு இன்று சென்றிருந்தார்.
இதற்கு முன் கடந்த 17 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட
தீர்மானத்திற்கு அமைய குறித்த இடத்தில் இன்று காலை மீண்டும்
அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன்போது மேலும் பல எலும்புகள் மீட்கப்பட்டதாக எமது பிராந்திய
செய்தியாளர் கூறினார்.
மன்னார் மாவட்ட நீதவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா,
சட்ட வைத்திய அதிகாரி, பல்கலைக்கழக பேராசிரியர்,
சட்டத்தரனிகள் மற்றும் அதிகாரிகளும் அகழ்வுப் பணிகள்
இடம்பெற்ற பகுதிக்கு வந்திருந்தனர்.
மன்னார் தீவின் நுழைவாயில் பகுதியில் லங்கா சதோச விற்பனை
நிலையம் ஒன்று அமைப்பதற்கான பணிகள் அண்மையில்
ஆரம்பிக்கப்பட்டிருந்தன
குறித்த இடத்திலிருந்து அகழ்வு செய்யப்பட்ட மண், மன்னார்
எமில்நகர் பகுதி வீடொன்றில் கொட்டப்பட்டபோது அதில் மனித
எச்சங்கள் இருப்பதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து இச்சம்பவத்தை பொலிசார் மன்னார் நீதவான்
நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
நீதவானின் முன்னிலையில் சட்டவைத்திய அதிகாரியின்
தலைமையில், கொட்டப்பட்ட மற்றும் வீட்டு வளாகத்தில் பரப்பப்பட்ட
மண்ணில் இருந்த சந்தேகத்திற்கிடமான எலும்புகள் மீட்கப்பட்டு
பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதுடன் சதொச கட்டிட நிர்மான
வேலைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன
இந்நிலையில் மண் அகழ்வு செய்யப்பட்டு எச்சங்கள்
கண்டுபிடிக்கப்பட்ட சதொச கட்டிட வளாகத்தை மன்னார் நீதவான்
,சட்ட வைத்திய நிபுணர், விசேட தடயவியல் நிபுணத்துவ பொலிஸார்,
சதோச சார்பாக ஆஐராகியுள்ள சட்டத்தரணிகள் பார்வையிட்டதுடன்
முதற்கட்டமாக இரண்டு நாட்கள் அகழ்வுப் பணிகள்
மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த நிலையில் குறித்த பகுதியில் மேலும் எலும்புக்கூடுகள்
இருக்கலாம் என எழுந்த சந்தேகம் காரணமாக இன்று மீண்டும்
அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த அகழ்வுப் பணிகள் நாளையும் தொடரவுள்ளதாக எமது
செய்தியாளர் கூறுகின்றார்.