அடுத்து வரும் நாட்களிலும் தொடர் மழை

அடுத்து வரும் நாட்களிலும் தொடர் மழை

by Staff Writer 28-05-2018 | 8:39 AM
எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாடு முழுவதும், நாட்டை சுற்றியும் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியமுள்ளதாக திணைக்களம் தெரிவிக்கின்றது. கடற்பிராந்தியங்களிலும் காற்று அதிகரித்து வீசுவதால் மீனவர்களும் கடற்சார் ஊழியர்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக 43 ஆயிரத்து 604 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 66 ஆயிரத்து 228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 339 முகாம்களில் 19 ஆயிரத்து 519 குடும்பங்களை சேர்ந்த 75 ஆயிரத்து 13 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்தங்களினால் 118 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 5 ஆயிரத்து 73 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 165 வர்த்தக நிலையங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் சீரற்ற வானிலையினால் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமற் போயுள்ளார். நீரில் மூழ்கியதில் 12 பேரும், மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி ஐவரும் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. மழையினால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட கம்பஹா ஜா எல வீதியில் தற்போது போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 400 பேர் 15 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழை வௌ்ளத்தினால் அதிகமாக பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் 93 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் 150 மில்லிமீட்டர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதை தொடர்ந்து மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய இரத்தினபுரி மாவட்டத்தின் எலப்பாத்த, குருவிட்ட, எஹலியகொட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹூபிட்டிய, தெஹியோவிட்ட, தெரணியகல, ருவண்வெல்ல, அரநாயக்க, மாவனெல்ல பகுதிகளுக்கும் நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, கொத்மலை மற்றும் நுவரெலியா பிரதேச செயலாளர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர, அகலவத்த, புலத்சிங்கள, இங்கிரிய, வலல்லாவிட்ட மற்றும் காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, நாகொட, நெலுவ, தவலம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.