வௌி மீனவர்களின் அத்துமீறல்-யாழ் மீனவர்கள் பாதிப்பு

வடமராட்சியில் வௌி மாவட்ட மீனவர்களின் அத்துமீறலினால் உள்ளூர் மீனவர்கள் பாதிப்பு

by Staff Writer 27-05-2018 | 9:44 PM
COLOMBO (News 1st) - யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் வௌி மாவட்ட மீனவர்கள் அத்துமீறி கடல் அட்டை பிடிப்பதால் தாம் பாதிக்கப்படுவதாக  அப்பகுதி மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தாழையடி பகுதியில் இன்று கவனயீர்ப்பு நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபட்டனர். கடல் அட்டைகளை பிடிக்கும் வௌி மாவட்ட மீனவர்களுக்கு தொழிலை கைவிடுமாறு இன்று அறிவிக்கப்பட்டதாக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். நாளை காலை பத்து மணி வரை அதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். யாழ் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கடலட்டை பிடிக்கப்பட்டுவதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டுவது தொடர்பில் கடற்றொழில் திணைக்களத்திடம் நியூஸ்பெஸ்ட் வினவியது, யாழ் மாவட்ட கரையோரத்திலிருந்து ஐந்து கிலோமீற்றருக்கு அப்பால் கடலட்டை பிடிப்பதற்கு கடற்றொழில் பணிப்பாளர் நாயகத்தினால் அனுமதி வழங்கப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். 400 பேருக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார் .