ஆட்ட நிர்ணயம் தொடர்பிலான ஆவணப்படம் வௌியானது

ஆட்ட நிர்ணயம் தொடர்பிலான ஆவணப்படம் வௌியானது

by Staff Writer 27-05-2018 | 9:55 PM
COLOMBO (News 1st) - ஆட்ட நிர்ணயம் தொடர்பிலான தகவல்கள் அடங்கிய ஆவணப்படமொன்றை அல்ஜெசீரா அலைவரிசை இன்று  ஒளிபரப்பியுள்ளது. இலங்கையர்கள் இருவர் பணத்திற்காக ஆட்நிர்ணய சதியுடன் தொடர்புப்பட்டுள்ளதாக அந்த ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது அல் ஜெசீரா அலைவரிசை இரகசியமான முறையில் தகவல்களை தகவல்களை திரட்டி அதன் பின்னர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி 2016 ஆம் ஆண்டு இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியிலும், கடந்த வருடம் இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் காலி மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் உதவி முகாமையாளரான தரங்க இந்திக்க மற்றும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய தரிந்து மென்டிஸ் ஆகியோர் காலி மைதானத்தின் தன்மையை மாற்றுவதற்கு ரொபின் மொரிஸ் என்பவரை உபயோகித்துள்ளனர். இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான ஜீவந்த குலதுங்க மற்றும் தில்ஹார லொக்குஹெட்டிகே ஆகியோர் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுவது போன்று கலந்துரையாடும் காணொளியையும் அல்ஜெசீரா தொலைக்காட்சி வெளியிட்டது இதனிடையே ரொபின் மொரிஸ் மற்றும் பாகிஸ்தானின் முன்னாள் வீரரான ஹசன் ராசா ஆகியோர் ஆட்ட நிர்ணயம் தொடர்பில் உரையாடுகின்ற கா​ணொளியை அல்ஜெசீரா தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ஆட்ட நிர்ணயம் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை முன்னெடுக்கும் அனைத்து விசாரணைகளுக்கும் முழுமையான ஆதரவை வழங்குவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கையொன்றினூடாக அறிவித்தது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியான ஆஷ்லி டி சில்வா சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதான நிறைவேற்று அதிகாரியான டேவிட் ரிச்சட்சனுடன் இது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.