சட்டவிரோத கேபிள் இணைப்புகள்: ஆராய குழு நியமனம்

யாழில் சட்டவிரோத கேபிள் இணைப்புகள் தொடர்பில் ஆராய குழு நியமனம்

by Bella Dalima 26-05-2018 | 5:28 PM
Colombo (News 1st)  யாழ். மாவட்டத்தில் மின்சார கம்பங்களினூடாக பொருத்தப்பட்டுள்ள கேபிள் இணைப்புகள் தொடர்பில் ஆராய்வதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்த்தன தெரிவித்தார். ​ எதுவித அனுமதியும் பெறப்படாது யாழ். மாவட்டத்தில் மின் கம்பங்களினூடாக கேபிள் இணைப்புகள் பொருத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட குழுவுடன் கலந்துரையாடி, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்த்தன சுட்டிக்காட்டினார். யாழ். மாவட்டத்தில் கேபிள் இணைப்புகள் பாதுகாப்பற்ற வகையில் வழங்கப்பட்டுள்ளதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றமை தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் நேற்று (25) செய்தி வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.